Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று கொரோனாவில் இருந்து மீண்டாலும் 3 மாதங்களுக்கு அறிகுறி இருக்கும்

ஜுன் 27, 2021 10:15

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்கள் பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு டெலிகவுன்சிலிங் மூலம் ஆலோசனைகளும் தேவைப்படுவோருக்கு மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக வல்லுனர்கள் ஒரு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். இதற்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் 48.2 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று மீண்டவர்கள். மற்றவர்கள் வீட்டு தனிமையில் இருந்தவர்கள்.

மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டவர்களில் 34 சதவீதம் பேர் இணை நோய்களுடன் காணப்பட்டனர். அதில் 23 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி, 19 சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 3.2 சதவீதம் பேருக்கு இதயநோய், 1.1 சதவீதம் பேருக்கு ஆஸ்துமாவும் இருந்தது.  அதில் இருந்து மீண்டு வந்தவர்கள் இருமல், மூச்சு பிரச்சினை, உடல் சோர்வு, தூக்கமின்மை, பசியின்மை, உடல் எடை குறைவு, முடி உதிர்தல், மூட்டு வலி போன்ற பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.

குணமடைந்த பிறகும் அறிகுறிகள் இருப்பதாக புகார் தெரிவித்தவர்களில் 57 சதவீதம் ஆண்கள், 43 சதவீதம் பேர் பெண்கள் ஆகும். இவர்களில் 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் 40 சதவீதம் பேரும், 30 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களில் 24 சதவீதம் பேரும் தொடர் அறிகுறிகளால் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் இருந்தவர்களில் 4 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு அவர்களில் 4 சதவீதம் பேருக்கு குணமடைந்த பிறகு அறிகுறிகள் தென்பட்டுள்ளது.

வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களை விட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மீண்டவர்களிடம் தான் கொரோனா அறிகுறி அதிகமாக உள்ளது. தொடர்ந்து இந்த அறிகுறிகள் 3 மாதம் வரை இருக்கும் என்று வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்